இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்


இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு:  மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி செந்தில் குமார்
x
தினத்தந்தி 6 Dec 2023 10:02 AM GMT (Updated: 6 Dec 2023 10:06 AM GMT)

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன் என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்ல முடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே கவர்னர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள்.

பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா' மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமாரின் இந்த பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் கண்டித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலினும் எம்.பி செந்தில்குமாரை கண்டித்து, அவரது கருத்தை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்.பி செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் குமார் பதிவிட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story