வருமான வரித்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - மத்திய அரசு அறிவிப்பு


வருமான வரித்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - மத்திய அரசு அறிவிப்பு
x

கோப்புப்படம்

வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல்மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரித்தாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இதில் நேற்று முன்தினம் மாலை வரை 4.52 கோடி பேர் வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும் இன்றைக்குள் வரிதாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், 'ஜூலை 29-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 4.52 கோடி வருமான வரித்தாக்கல் முடிந்துள்ளது. இதற்கான கடைசி நாள் 31-ந்தேதி (இன்று) என்பதால் நீங்களும் உங்கள் வரித்தாக்கலை செய்து முடிப்பீர்கள் என நம்புகிறோம்' என வருமான வரி செலுத்துவோரை அறிவுறுத்தி இருந்தது.

கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்து இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வரித்தாக்கல் நடைபெறும் என வருமான வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

இன்றுடன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000-மும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story