கிழக்கு லடாக் விவகாரம்: விரைவாக தீர்வு காண இந்தியா-சீனா முடிவு


கிழக்கு லடாக் விவகாரம்: விரைவாக தீர்வு காண இந்தியா-சீனா முடிவு
x

Image Courtacy: PTI

இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 19-வது சுற்று 2 நாள் பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி இந்தியா-சீனா இடையே உரசல் உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இரு தரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 19-வது சுற்று 2 நாள் பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது.அதையடுத்து இரு தரப்பின் சார்பில் ஒரு கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'கிழக்கு லடாக்கின் மேற்குப் பகுதியில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்விதமாக இரு தரப்பும் நேர்மறையான, ஆக்கப்பூர்வமான, ஆழமான விவாதத்தை மேற்கொண்டன.

அப்போது இரு நாட்டு தலைமை வழிகாட்டுதலின்படி, வெளிப்படையாகவும், எதிர்காலத்தை முன்னோக்கியும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும், பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பது என்றும், ராணுவ மற்றும் ராஜதந்திர வழியிலான பேச்சுவார்த்தைகளின் வேகத்தை தொடர்ந்து பராமரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இடைப்பட்ட காலத்தில், எல்லைப்புற பகுதியில் அமைதியைப் பராமரிப்பது என்றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.'

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story