கிழக்கு லடாக் பிரச்சினை: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை


கிழக்கு லடாக் பிரச்சினை: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை
x

கோப்புப்படம்

கிழக்கு லடாக் பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்துப் புள்ளி 15-ல் இருந்து படைகளை திரும்பப்பெறுவதுடன், கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதிப்படுத்துமாறு சீனாவை இந்தியா வலியுறுத்தும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தோனேஷியாவில் கடந்த 6-ந்தேதி சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்த மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கிழக்கு லடாக் உள்ளிட்ட அனைத்து எல்லை பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story