கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை: இந்தியா மேல் முறையீடு


தினத்தந்தி 9 Nov 2023 2:20 PM GMT (Updated: 10 Nov 2023 4:48 AM GMT)

கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் ஆவர்.

இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத் துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது. அது போல் அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டனர்.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்தின் மூலம் மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அண்மையில் 8 பேருக்கும் மரண தண்டனையை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தபக்சி இதுதொடர்பாக கூறியதாவது:- கத்தாரில் உள்ள முதல் விசாரணை நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு ரகசியமாக வைக்கப்பட்டு சட்டக்குழுவுடன் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கத்தார் அதிகாரிகளுடன் நாங்களும் தொடர்பில் உள்ளோம்" என்றார்.


Next Story