ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்த சரியான நாடு இந்தியா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்


ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்த சரியான நாடு இந்தியா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
x

பிரதமர் மோடியின் தலைமைக்கு மரியாதை செலுத்துவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

ஜி-20 உச்சி மாநாட்டை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்த நிலையில் ஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்துவதற்கு சரியான நாடு இந்தியா தான் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

"இந்திய நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அசாதாரண வெற்றிகள் மூலம் ஜி-20 மாநாட்டை சரியான நேரத்தில் தலைமையேற்று நடத்துவதற்கு சரியான நாடு இந்தியா தான் என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடியின் தலைமைக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியா இதுபோன்ற உலகளாவிய தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் காலநிலை மாற்றத்தைக் கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை சந்திக்க ஜி-20 மூலம் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்."

இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.


Next Story