"இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்" - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்


இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
x

இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் மந்திரி கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ பதக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது;-

"கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்தது. இந்த சாதனையை நிகழ்த்தியதில் விவசாயத்தின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயம் முதுகெலும்பாக இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உயர்ந்திருப்பதற்கு விவசாயமும், விசாயம் சார்ந்த தொழில்களுமே முக்கிய காரணம். தற்போது இந்தியாவைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது மிகப் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். முதலீடுகளை செய்வதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஏற்ற நாடாக இந்தியா இருக்கிறது. உறுதியான கொள்கைகளை வகுத்து செயல்படுத்தியதன் காரணமாகவே இத்தகைய சூழல் உருவாகி உள்ளது."

இவ்வாறு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.


Next Story