கர்நாடகாவில் இந்திய விமான படை வீரர் மர்ம மரணம்: 6 உயரதிகாரிகள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு


கர்நாடகாவில் இந்திய விமான படை வீரர் மர்ம மரணம்:  6 உயரதிகாரிகள் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு
x

கர்நாடகாவில் இந்திய விமான படை வீரர் மர்ம மரணத்தில் 6 உயரதிகாரிகள் மீது அவரது குடும்பத்தினர் கொலை குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.


பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திய விமான படை தொழில்நுட்ப கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 21-ந்தேதி அங்கித் குமார் ஜா (வயது 21) என்ற இந்திய விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. அங்கித்தின் அறையில் இருந்து 7 பக்கங்கள் கொண்ட குறிப்பு ஒன்றையும் போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அதனை விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அங்கித்தின் குடும்பத்தினர், அங்கித்தின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். அங்கித் படுகொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என அவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

இதுபற்றி இந்திய விமான படையை சேர்ந்த 6 உயரதிகாரிகள் மீது அங்கித்தின் சகோதரர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், அவர்கள் அனைவர் மீதும் கொலை குற்றச்சாட்டு சுமத்தி உள்ளதுடன், அவர்கள் சான்றுகளை அழித்தும் உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்யும்படி அங்கித்தின் சகோதரர் வேண்டுகோளும் விடுத்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளதுடன், பிரேத பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஜலஹல்லி போலீசார் ஐ.பி.சி.யின் பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story