எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தில் டிரோன்கள் இணைப்பு


எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தில் டிரோன்கள் இணைப்பு
x

கோப்புப்படம்

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவத்தில் டிரோன்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் போர் முறைகளும் நவீன மயத்தை எட்டி வருகின்றன. இதில் டிரோன்கள் மூலமான தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்தது.

வெடிபொருட்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் இந்த டிரோன்கள் படைகளுக்கு மிகுந்த தேவையாகி இருக்கிறது. சமீப காலத்தில் நடந்து முடிந்ததும், நடந்து வருவதுமான பல மோதல்களில் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அஜர்பைஜான், அர்மீனியா, சிரியா மீதான தாக்குதல்களிலும், சவுதி அரேபிய எண்ணெய் வயல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் இந்த டிரோன்கள் முக்கிய பங்காற்றின.

எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது உலக நாடுகளை மிகப்பெரும் சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கும் ரஷியா-உக்ரைன் போரிலும் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.

நாட்டின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பத்தை இந்திய ராணுவத்திலும் இணைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி இந்திய ராணுவத்துக்கு டிரோன்களை தயாரித்து வழங்க 2 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்கிய டிரோன்கள் மட்டுமின்றி தானியங்கி கண்காணிப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய டிரோன் திரள் அமைப்பையும் ராணுவம் தொடங்கி உள்ளது. அந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்கிய டிரோன் அமைப்பு நேற்று ராணுவத்தில் முறைப்படி இணைக்கப்பட்டது.

இந்த டிரோன் அமைப்பானது ஒரே நிலையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும் பல டிரோன்களை கொண்டிருக்கின்றன. மேலும் பலவிதமான ெவடிபொருட்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் திறனும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு கூட்டுத் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் எதிரிகளின் நிலைகளை அழிக்க முடியும்.

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த டிரோன்கள் தங்களுக்குள் பணிகளை தானாக பகிரவும், ேதவைப்படும் இடங்களுக்கு செல்லவும், இலக்கை நோக்கி நகரும் போது மோதலை தவிர்க்கவும், தேடலை மேற்கொள்ளவும் செய்கின்றன.

எதிரி நாட்டு பீரங்கிகள், வாகனங்கள் மற்றும் வீரர்கள் போன்ற இலக்குகளை அடையாளம் கண்டு, தானாக கட்டுப்பாட்டு நிலைய திரையில் அதை காட்டுவதுடன், அந்த இலக்குகள் மீது தாக்குதலை நடத்தவும் இந்த டிரோன்கள் துல்லியமாக செயல்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story