நடுவானில் இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - வழக்குப்பதிவு


நடுவானில் இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி - வழக்குப்பதிவு
x

விமானம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இன்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம் மும்பை விமான நிலையம் அருகே வந்த போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்தார்.

அவசர கால கதவை திறப்பதற்கான பகுதி கவர் மூலம் மூடப்பட்டிருந்த நிலையில் அந்த கவரை விலக்கி கதவை திறக்க அந்த பயணி முயற்சித்தார்.

இதை கண்ட விமான ஊழியர்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜக முக்கிய நிர்வாகி தேஜஸ்வி சூர்யா திறந்தார். தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கால கதவை தவறுதலாக திறந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்புகேட்டதாகவும் மத்திய சிவில் விமானப்போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சின்ஹா தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. விமானத்தின் அவசரகால கதவை தேஜஸ்வி சூர்யா தவறுதலாக திறந்த நிலையில் அவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story