கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்


கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர்
x
தினத்தந்தி 11 March 2023 9:45 PM GMT (Updated: 11 March 2023 9:46 PM GMT)

கொரோனாவை விட அதிகமாக பரவிய வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள் என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பேசினார்.

வதந்திக்கு பலியான மக்கள்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் நலன், விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் புனேயில் தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் நடந்த 'ஒய்-20' அமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜி-20 நாடுகளில் உள்ள இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாற அதிகாரப்பூர்வமான கலந்தாய்வு அமைப்பு 'ஒய்-20' ஆகும்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பேசியதாவது:-

கொரோனா பரவிய நேரத்தில் தொற்றுநோயை விட தவறான தகவல்களும், வதந்திகளும் தான் அதிகம் பரவின. 'பேண்டமிக்'கை (தொற்று பரவல்) விட, 'இன்போபேண்டமிக்' (தவறான தகவல் பரவுதல்) தான் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

உலக அளவில் இந்தியாவுக்கு சாதகமான இடம்

சில நேரங்களில் தொழில்நுட்பம் செயல்படுகிறதா? இல்லையா? என்பதை நாம் பார்க்க வேண்டும். உலக அளவில் இந்தியாவின் இடம் சாதகமான நிலைக்கு மாறி உள்ளது. இன்று, இந்தியா நாட்டு நலன் பற்றி முடிவு எடுக்கும் நிலையில் உள்ளது. நேருக்கு நேர் பேசுகிறது. வலுவான இடத்தில் நின்று பேசுகிறது.

இந்தியா தாழ்ந்து பார்க்கவோ அல்லது புருவத்தை உயர்த்தி பார்க்கவோ இல்லை. எந்த நாடு சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், எல்லா பேச்சுவார்த்தையும் நேருக்கு நேர் மேற்கொள்ளப்படுகிறது. புதிய இந்தியாக மேலும், மேலும் சிறப்பாகி கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story