36 செயற்கைகோள்களை சுமந்தபடி 'எல்.வி.எம்-3' ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது


36 செயற்கைகோள்களை சுமந்தபடி எல்.வி.எம்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
x

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 36 ‘ஒன்வெப்’ செயற்கைகோள்களை சுமந்தப்படி ‘எல்.வி.எம்3-எம்3’ ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இஸ்ரோ கவுண்ட்டவுன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளன. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி 30 வினாடிகளில் விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தகவல் தொடர்பு செயற்கைகோள்

இங்கிலாந்தின் ஒன்வெப் செயற்கைகோள் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களுடன் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. அப்போது தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இந்த 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன்னாகும். எல்.வி.எம்3-எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை தூக்கி செல்லும் திறன் கொண்டது. எரிபொருள்கள் நிரப்பப்பட்ட நிலையில் தீவிரமாக செயற்கை கோள்களையும், ராக்கெட்டின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story