டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:சுப்ரீம் கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு


டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு:சுப்ரீம் கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
x

ஆண்டுதோறும் டெல்லி இந்த பிரச்சினையை சந்திப்பதை அனுமதிக்க முடியாது.

புதுடெல்லி,

டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு வருகிற 18-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி காற்று மாசு பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அதன் விசாரணை நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஆண்டுதோறும் டெல்லி இந்த பிரச்சினையை சந்திப்பதை அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு தடவையும் அரசியல் போர் நடத்துவதை அனுமதிக்க முடியாது.ஆகவே, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வைக்கோல், கோதுமை, கரும்பு தோகை உள்ளிட்ட பயிர் கழிவுகள் எரிப்பது உடனடியாக நிறுத்தப்படுவதை அந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அதுபோல், டெல்லியில், மாநகராட்சி திடக்கழிவுகள் திறந்தவெளியில் எரிக்கப்படாமல் இருப்பதை டெல்லி அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்தகட்ட விசாரணையை 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story