மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: 'டெல்லியில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது' - கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி


மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: டெல்லியில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது - கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
x

கோப்புப்படம்

டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான சுரங்கப்பாதையில் டெலிவரி ஏஜெண்டு ஒருவர், அவரது கூட்டாளி ஒருவர் என 2 பேரை மோட்டார் சைக்கிளில் வந்த 4 வழிப்பறி கொள்ளையர்கள் துப்பாக்கிமுனையில் மறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்த கொள்ளையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டு ராஜ்ஜியமாக டெல்லி...

இந்த நிலையில், டெல்லியில் நேற்று மின்சார வாகனங்களுக்கு 'சார்ஜ்' ஏற்றுகிற நிலையங்களை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடங்கி வைத்து, நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரகதி மைதான சுரங்கப்பாதையில் வழிப்பறி கொள்ளைச் சம்பவம் நடந்து இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை அருகே தான் ஜி-20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. டெல்லியில் மக்கள் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக உணர்கிறார்கள். இது காட்டு ராஜ்ஜியம்.

என்ன நடக்கிறது?

டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாட்டின் தலைநகரில் இது போன்றா சட்டம், ஒழுங்கு நிலை இருக்க வேண்டும்?

மத்திய அரசும், துணை நிலை கவர்னரும் தங்கள் முழு சக்தியையும் டெல்லி அரசின் பணிகளை தடுத்து நிறுத்துவதில் ஈடுபடுவதால்தான் டெல்லியின் தற்போதைய சட்டம், ஒழுங்கு பிரச்சினை இப்படி ஆகி உள்ளது.

'பொறுப்பை எங்களிடம் விடுங்கள்'

அவர்கள் நமது பள்ளிகளை, சிகிச்சை மையங்களை, தண்ணீர் வினியோகத்தை, மின்வினியோகத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்றுதான் சிந்திக்கிறார்கள். அவர்கள் நமது பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும், அவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களால் (மத்திய அரசு) சட்டம், ஒழுங்கை கையாள முடியாவிட்டால் பொறுப்பை எங்களிடம் விடுங்கள். நாங்கள் டெல்லியை நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக மாற்றிக்காட்டுகிறோம் என்று அவர் கூறினார்.

டெல்லியின் சட்டம், ஒழுங்கு மத்திய அரசின் பொறுப்பில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Next Story