காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை


காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
x

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு கொன்றனர்.



ஜம்மு,



காஷ்மீரில் இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் உள்ளிட்டோர் மீது சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் அலூரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று மாலை 3.40 மணியளவில் தேடுதல் பணியை தொடங்கினர். இதில், பயங்கரவாதிகளுக்கும், படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூரில் ஜலூரா பகுதிக்கு உட்பட்ட பானிபோரா வன பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய பாகிஸ்தானிய பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். இதில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. 2 வெளிநாட்டு பயங்கரவாதி மற்றும் ஒரு உள்ளூர் பயங்கரவாதி தப்பி சென்றனர்.

இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி நிசார் கந்தே என்பவர் பாதுகாப்பு படையினரால் நள்ளிரவில் நடந்த மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த தகவலை கடந்த 2 தினங்களுக்கு முன் காஷ்மீர் காவல் துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி ஒன்று உள்பட ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோதலில் காயமடைந்த 3 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்பு அவர்கள் நலமுடன் உள்ளனர்.


Next Story