கேரளா: 7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை; 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு


கேரளா:  7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை; 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு
x

உடலளவிலும், மனதளவிலும் ஆசிரியர்கள் துன்புறுத்திய நிலையில், இந்த முடிவை அவன் எடுத்து விட்டான் என பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

ஆலப்புழா,

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் கட்டூர் பகுதியை சேர்ந்த சிறுவன் பிரஜித் (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

இந்த நிலையில், கடந்த 15-ந்தேதி சோகத்துடன் பிரஜித் வீட்டுக்கு வந்துள்ளான். இதன்பின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை சிறிது நேரத்திற்கு பின் கவனித்த அவனுடைய சகோதரன் அதிர்ச்சியடைந்து, பெற்றோரிடம் தெரிவித்து உள்ளான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாணவரணியினர் கடந்த 19-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரில், பிற மாணவர்கள் முன்னிலையில், பிரம்பு கம்பால் அவனை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். உடலளவிலும், மனதளவிலும் ஆசிரியர்கள் துன்புறுத்திய நிலையில், இந்த முடிவை அவன் எடுத்து விட்டான் என தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பள்ளியின் 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் இன்று தெரிவித்தனர். ஐ.பி.சி.யின் பிரிவு 324 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவாகி உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர். எனினும், குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை பற்றிய பிற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.


Next Story