பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு..!


பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு..!
x
தினத்தந்தி 22 Aug 2023 7:14 AM GMT (Updated: 22 Aug 2023 7:49 AM GMT)

பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த, பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசாரிடம் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் கேரள சைபர் கிரைம் போலீசார், பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை அழிக்க முயன்றனர். ஆனால் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்ததால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை. ஆகவே பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த நபரை கண்டு பிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

அவ்வாறு நோட்டீசு அனுப்பும் பட்சத்தில், 36 மணி நேரத்திற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு வாரமாகியும் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை நீக்கவில்லை. மேலும் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கும் சரியான பதிலை பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார், குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story