முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்


முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 3 Sep 2023 10:30 PM GMT (Updated: 3 Sep 2023 10:30 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் புதுப்பள்ளி சட்டசபை தொகுதி காலியானது. அதைதொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவித்ததையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் ஜெய்க் சி.தாமசும், பா.ஜனதா சார்பில் லிஜின் லாலும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியை தக்கவைக்க காங்கிரசும், அந்த கட்சியிடம் இருந்து தொகுதியை கைப்பற்ற இடது முன்னணியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் ஈடுபட்டதால் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் அனைவரும் புதுப்பள்ளியில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி தலைவர்களும் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந் தேதி நடைபெறுகிறது.


Next Story