கரும்புகளை எடை போடுவதில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; லட்சுமண் சவதி வலியுறுத்தல்


கரும்புகளை எடை போடுவதில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; லட்சுமண் சவதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:45 PM GMT)

கரும்பு எடை போடுவதில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமண் சவதி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

கரும்பு எடை போடுவதில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமண் சவதி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமண் சவதி பேசும்போது கூறியதாவது:-

முறைகேடு செய்கிறார்கள்

இந்தியாவில் அதிகளவு கரும்பு சாகுபடி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் விஜயாப்புரா, பாகல்கோட்டை, பீதர், பெலகாவி உள்ளிட்ட கித்தூர் கர்நாடகத்தில் தான் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள், கரும்பு கூலித்தொழிலாளர்கள் மூலம் கரும்பை வெட்டி டிராக்டரில் ஏற்றிச் சென்று சர்க்கரை ஆலையில் வழங்குகிறார்கள்.

அவ்வாறு கொண்டு செல்லப்படும் கரும்புகளை எடை போடுவதில் முறைகேடு செய்கிறார்கள். இதனால் விவசாயிகள், கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் மென்பொருள் மூலம் முறைகேடு செய்கிறார்கள். ஒரு சில சர்க்கரை ஆலைகள் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடுகின்றன. சர்க்கரைத்துறை மந்திரி சிவானந்த் பட்டீல், அரசு சார்பில் கரும்பு எடை மேடைகள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

கடும் நடவடிக்கை

மராட்டிய மாநில கும்பல் ஒன்று இந்த எடை முறைகேடுகளை செய்கிறது.அதற்கென்றே ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர். ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் அளவில் கரும்புகளை எடை போடுவதில் முறைகேடு செய்கிறார்கள். அதனால் கரும்புகளை எடை போடுவதில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.


Next Story