நில மோசடி வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை


நில மோசடி வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
x

இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி லாலு பிரசாத் வருகிற 29-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வருகிற 30-ம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story