"இந்தியா கூட்டணி" குறித்து கேள்வி எழுப்பிய இலங்கை அதிபர்: பதில் அளித்த மம்தா பானர்ஜி


இந்தியா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய இலங்கை அதிபர்: பதில் அளித்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 13 Sep 2023 3:41 PM GMT (Updated: 13 Sep 2023 3:46 PM GMT)

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛ இந்தியா' கூட்டணியை வழி நடத்துவீர்களா என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி அது மக்களின் கைகளில் உள்ளது என்றார்.

துபாய்,

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார்.

அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? ‛ இந்தியா ' கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தவாறே பதில் அளித்த மம்தா, அது மக்களின் விருப்பத்தை பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்... மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் எனக்கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக் கொண்டேன். அப்போது, கொல்கட்டாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சிமாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story