கடைசி வாய்ப்பு...!! காங்கிரசுக்கு 17 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாடி கட்சி


கடைசி வாய்ப்பு...!! காங்கிரசுக்கு 17 தொகுதிகளை ஒதுக்க முன்வந்த சமாஜ்வாடி கட்சி
x

தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பங்கேற்க கூடும் என அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நடப்பு ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த சூழலில், தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி 15 மாநிலங்களை உள்ளடக்கிய 6,700 கி.மீ. தொலைவை நடைபயணம் வழியே கடந்து செல்ல திட்டமிட்டு உள்ளார்.

இந்த நடைபயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதில் கூட்டணி கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின்னரே, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பங்கேற்க கூடும் என கூறினார்.

இந்நிலையில், கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகளை வழங்க அகிலேஷ் முன்வந்துள்ளார். இதுபற்றி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தொகுதி பட்டியல்கள் பற்றி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொகுதிகள் வழங்கப்பட்டதும், யாத்திரையில் கலந்து கொள்வோம் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியானது, மொராதாபாத் மற்றும் பல்லியா போன்ற தொகுதிகள் வேண்டும் என விரும்புகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சியும் அவற்றை சொந்தம் கொண்டாட விரும்புகிறது.

2019 மக்களவை தேர்தலில் மொராதாபாத் தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால், இந்த தொகுதியில் நடந்த மேயர் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பல்லியா தொகுதியும் சமாஜ்வாடி கட்சிக்கு வலிமையான தொகுதிகளில் ஒன்றாக உள்ளது.

இதனால், தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது. காங்கிரஸ் 28 தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், கடைசி வாய்ப்பாக 17 தொகுதிகளை வழங்க சமாஜ்வாடி முன்வந்துள்ளது.

இந்த சூழலில், சமாஜ்வாடி கட்சி 11 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த ஜனவரி 30-ந்தேதி அக்கட்சி வெளியிட்டது.


Next Story