பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார்: அத்வானி பாராட்டு


பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார்: அத்வானி பாராட்டு
x

அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோவில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோவிலில், வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த அரசியல் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 1980 மற்றும் 1990-களில் ராமர் கோவில் இயக்கத்துக்காக முன்வரிசையில் நின்று போராடியவர்கள், அத்வானி, ஜோஷி ஆவர். ராமர் கோவில் கட்ட அத்வானி ரத யாத்திரையும் மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும், 96 வயதான அத்வானி, கும்பாபிஷேகத்தில் பங்கேற்பாரா என்பது நிச்சயமற்றதாக இருந்தது. எனினும், அத்வானி பங்கேற்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் கூறினார். எனினும், அத்வானியை பாஜக புறக்கணிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அயோத்தியில் கோவில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் என்று அத்வானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அத்வானி கூறியதாவது-

"கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் இன்று இருப்பது போல பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது" என்றார்.


Next Story