காதலியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய என்ஜினீயர்


தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:45 PM GMT)

காதலிக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை என்ஜினீயர் ஒருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

காதலிக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை என்ஜினீயர் ஒருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

என்ஜினீயர்

பீகாரை சேர்ந்தவர் ரவிகுமார்(வயது 28). என்ஜினீயரான இவர் பெங்களூரு மைகோ லே-அவுட் பகுதியில் தங்கி உள்ளார். மேலும் இந்திராநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் சினேகா என்ற இளம்பெண் ஒருவரும் வேலை செய்து வந்தார். அவருக்கும், ரவிகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே அந்த பெண் வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு ரவிகுமாரிடம் முன்புபோல் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது காதலிக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ரவிகுமாருக்கு எழுந்தது. இந்த நிலையில் அவர் தனது காதலியை, தனது அறைக்கு அழைத்தார். அந்த பெண்ணும் அங்கு வந்தார். அப்போது ரவிகுமார், தனது காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவிகுமார் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது காதலி சினேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் சினேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

கைது

இதையடுத்து சினேகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மைகோ லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது தனது காதலி சினேகா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து இரும்பு கம்பியால் அவரை ரவிகுமார் தாக்கியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரவிகுமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story