2 ஆண்டுகளுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்று அமலுக்கு வந்தது


2 ஆண்டுகளுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்று அமலுக்கு வந்தது
x

சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆனால் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த விலை குறைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக மத்திய மந்திரி மேலும் கூறியிருந்தார். இதன் மூலம் சுமார் 2 ஆண்டு களுக்குப்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக இருந்தது. இது இன்று முதல் ரூ.94.72 ஆக விற்பனையாகிறது. இதைப்போல டீசல் விலையும் ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.100.73 ஆக குறைந்துள்ளது. இதைப்போல டீசல் விலையும் ரூ.94.33-ல் இருந்து ரூ.92.33 ஆக குறைந்திருக்கிறது.


Next Story