மத்திய பிரதேசம்: முன்னாள் மந்திரி, மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்


மத்திய பிரதேசம்: முன்னாள் மந்திரி, மகளுக்கு ஆசிட் வீச்சு மிரட்டல்
x

மத்திய பிரதேசத்தில் முன்னாள் மந்திரியான ஜெய்பான் சிங் மற்றும் அவருடைய மகளுக்கு ஆசிட் வீசி கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.



குவாலியர்,


மத்திய பிரதேச அமைச்சரவையின் முன்னாள் மந்திரி ஜெய்பான் சிங் பாவையா. இவரது மகள் சமீதா சிங். குவாலியர் மாவட்டத்தில் உள்ள மாதவ் மகாவித்யாலயா கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மந்திரி மகள் சமீதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்து உள்ளது. 2022-ம் ஆண்டு நவம்பர் 4-ந்தேதியிட்ட அந்த கடிதத்தில், மந்திரி 2 மாதங்களில் கொலை செய்யப்படுவார் என்றும் மந்திரி மகள் மீது ஆசிட் வீசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தெரிய வந்ததும், அதே நாளில் சமீதா போலீசில் புகார் செய்துள்ளார். இதனை உடனடியாக போலீசார் விசாரணைக்கு எடுத்து கொண்டனர். இந்நிலையில், 3 மாத விசாரணைக்கு பின்னர், கடந்த வெள்ளி கிழமை ஜனக் கஞ்ச் காவல் நிலையத்தில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர்.

அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் எழுதி உள்ளார். சமீதா பணிபுரியும் மையத்தில் வேலை செய்யும் மற்றொரு பணியாளருக்கு எதிரான போக்கை சமீதா கைவிடும்படி குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்படி இல்லையெனில், கடிதத்தில் எழுதியுள்ளது போல் நடக்கும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது என ஏ.எஸ்.பி. கஜேந்திரா சிங் வர்தமான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story