மத்திய பிரதேசம்: மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து; 13 பேர் காயம்


மத்திய பிரதேசம்:  மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து; 13 பேர் காயம்
x
தினத்தந்தி 25 March 2024 4:25 AM GMT (Updated: 25 March 2024 5:15 AM GMT)

கோவிலில் பஸ்ம ஆரத்தியில் ஈடுபட்டு இருந்த தலைமை பூசாரியான சஞ்சய் குருவும் காயமடைந்து உள்ளார்.

உஜ்ஜைன்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இன்று காலை கருவறையில் சாமிக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. இதற்காக காலையிலேயே மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். சாமி தரிசனத்திற்காக பலர் காத்திருந்தனர்.

அப்போது, பஸ்ம ஆரத்தி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், கோவில் பூசாரி மற்றும் பணியாளர்கள் என 13 பேர் வரை காயமடைந்தனர். இதில், பஸ்ம ஆரத்தியில் ஈடுபட்டு இருந்த தலைமை பூசாரியான சஞ்சய் குருவும் காயமடைந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உஜ்ஜைன் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வண்ண பொடிகள் தூவும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது, தீப்பற்றி கொண்டது என சம்பவம் நடந்தபோது அதனை பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என மாவட்ட கலெக்டர் நீரஜ் குமார் சிங் கூறியுள்ளார்.


Next Story