தாராவி மேம்பாட்டு திட்டம், அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு - காங்கிரஸ் விமர்சனம்


தாராவி மேம்பாட்டு திட்டம், அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு - காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 15 July 2023 10:45 PM GMT (Updated: 15 July 2023 10:45 PM GMT)

தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

தாராவி மேம்பாட்டு திட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒப்படைத்து மராட்டிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

தேவேந்திர பட்னாவிஸ் தனது வசம் இருந்த வீட்டு வசதித்துறையை வேறு மந்திரிக்கு ஒதுக்கீடு செய்வதற்கு முன் ரூ.3 ஆயிரத்து 69 கோடி மதிப்பிலான தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒப்படைத்து உள்ளார். மும்பை நகரின் முக்கியமான பகுதியில் இந்த திட்டம் சுமார் 600 ஏக்கரில் அமைகிறது.

பிரதமர் மோடியின் பரிசு

இந்த திட்டத்தின் ஒப்பந்த பணி முதலில் வேறொரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஷிண்டே- பட்னாவிஸ் தகராறு காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

மோடியின் நெருங்கிய நண்பர் அதானி மட்டுமே சாத்தியமான வெற்றியாளர் என்பதை காட்ட டெண்டரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஷிண்டே-பட்னாவிஸ் அரசு மிக அற்புதமான கூத்துகளை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. இந்த திட்டம் பிரதமர் மோடி தனது நண்பருக்கு அளித்த பரிசு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story