குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை


குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை
x

மராட்டியத்தில் நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் 45 வயது நபர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை வாதோடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைஷ்ணோ தேவி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனோஜ் அசோக் பெலே என்ற நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைப் பிரிந்துவிட்டார். இதையடுத்து பரஸ்பர ஒப்பந்தத்தின்படி, அவரது மகன் பிரின்ஸ் (வயது 12), மற்றும் மகள் தனிஷ்கா (வயது 7) இருவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பெலே இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த பெலே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரது மனைவியின் குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, பெலே பதிலளிக்கவில்லை. இதையடுத்து பெலேவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, குழந்தைகள் இருவரும் தரையில் படுத்திருந்த நிலையில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதையடுத்து குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story