தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்கள்


தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்கள்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:47 PM GMT)

எச்.டி.கோட்டை, பிரியப்பட்டணாவில் கடும் வறட்சி ஏற்பட்டதால் தண்ணீர் இன்றி கருகி போன மக்காசோள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எச்.டி.கோட்டை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் அணைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் மாநிலத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மைசூரு மாவட்டத்தில் எச்.டி.கோட்டை, பிரியப்பட்டணா தாலுகாக்களில் அதிகமாக மக்காசோள பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை பொய்த்து போனதால், மக்காசோள பயிர்கள் கருகி வருகின்றன. பிரியப்பட்டணா தாலுகாவில் மொத்தம் 12,740 ஹெக்டேரில் மக்காசோளம் பயிரிடப்பட்டிருந்தது.

மழையின்மை காரணமாக 8,643 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோள பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி நாசமாகி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,500 இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், எச்.டி.கோட்டை தாலுகாவிலும் தண்ணீர் இன்றி மக்காசோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எச்.டி.கோட்டை தாலுகாவில் 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காசோளம் பயிரிடப்பட்டிருந்தது. இதில் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி நாசமாகி உள்ளன.

எச்.டி.கோட்டை தாலுகாவில் 50 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. மக்காசோளம் மட்டுமின்றி மற்ற பயிர்களும் நாசமாகி வருகின்றன.


Next Story