வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!


வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!
x

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடரியால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டா,

உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடரியால் கழுத்தறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள கார்பரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செக்டர்-36 பகுதியைச் சேர்ந்த காஜல் என்பவரை ரவி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முதலே இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் தங்களால் இயன்றதை விட அதிகமான வரதட்சணை கொடுத்ததாகவும் ஆனாலும் மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து பைக் மற்றும் பணம் கேட்டு காஜலை வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுமை செய்வதாக காஜல் தன்னுடைய வீட்டில் கூறியுள்ளார்.

இதையடுத்து ரவிக்கும் காஜலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு ரவி கோடரியால் காஜலை கழுத்தறுத்து கொலை செய்தார். இன்று காலை தகவலறிந்த போலீசார் ரவியை கைது செய்தனர். காஜலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story