திரிபுரா முதல்-மந்திரியாக 2வது முறை தேர்வாகும் மாணிக் சகா...!


திரிபுரா முதல்-மந்திரியாக 2வது முறை தேர்வாகும் மாணிக் சகா...!
x

திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

அகர்தலா,

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்றது. 32 தொகுதிகளில் பாஜகவும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது.

இதனிடையே, கடந்த முறை திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா மீண்டும் 2வது முறையாக முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மற்றொரு பாஜக மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகின. இதனால், தேர்தலில் வெற்றிபெற்றபோதும் முதல்-மந்திரி யார்? என்பதில் திரிபுரா பாஜகவில் குழப்பம் நீடித்து வந்தது. இதையடுத்து, பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர்.

இந்நிலையில், பாஜக உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரிபுரா முதல்-மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.

இதன் மூலம் திரிபுராவின் முதல்-மந்திரியாக 2வது முறையாக மாணிக் சகா விரைவில் பதவியேற்க உள்ளார். முதல்-மந்திரியாக மாணிக் சகா மற்றும் மந்திரிகள் பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story