மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு


மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு
x

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பதற்ற சூழலால், அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இம்பால்,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் இடையே நடந்த போட்டி ஊர்வலம் வன்முறையாக வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 16 பேரின் உடல்கள் சுராசந்திரப்பூர் மாவட்ட மருத்துவமனையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் மையத்திலும் வைக்கப்பட்டு உள்ளன.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள மருத்துவ அறிவியல் மண்டல மையத்தில் 23 பேரின் உடல்கள் வைக்கப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மணிப்பூரில் பெருமளவில் பழங்குடியினர் வசித்து வரும் நிலையில், மெய்தெய் சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் ஒற்றுமை பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்த முடிவானது.

கடந்த இரு தினங்களுக்கு முன் பழங்குடி மாணவர் சங்கத்தினர் ஊர்வலம் சென்றனர். அவர்களது ஊர்வலத்திற்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணியும் சுராசந்திரப்பூர் மாவட்டத்தில் நடந்தது. அப்போது, திடீரென இரு தரப்பினருக்கு இடையே கலவரம் வெடித்தது. வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. சாலையில் வழிநெடுகிலும் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். மணிப்பூர் நிலைமை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றி கேட்டறிந்து உள்ளார். நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story