மணிப்பூர் : வன்முறைக்கான காரணத்தை கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்


மணிப்பூர் : வன்முறைக்கான காரணத்தை கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்
x

மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைக்கான காரணத்தை கண்டறிய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தினர்.

இந்த கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.

வன்முறை பகுதியில் இருந்து, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இணைய தள சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், மணிப்பூரில் நீட் தேர்வை தள்ளி வைத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.

இதன்பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. வன்முறையின்போது, பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்ட மக்கள், அவர்களுடைய சொந்த இடங்களுக்கு திருப்பி கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதனிடையே மணிப்பூரில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. மேலும் 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் 1,700க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மணிப்பூரில் பரவலான வன்முறைக்கான காரணங்களைக் கண்டறியவும் அதன் அளவை மதிப்பிடவும் 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைத்துள்ளார்.

அந்த உண்மை கண்டறியும் குழுவில் முகுல் வாஸ்னிக், டாக்டர் அஜோய் குமார், சுதீப் ராய் பர்மன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் குழு தனது அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஒக்ரம் இபோபி சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்து வடகிழக்கு மாநிலத்தின் நிலைமை குறித்து விளக்கினர்.



Next Story