கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை - பெண்ணின் தந்தை கைது


கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை - பெண்ணின் தந்தை கைது
x

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார்.



பாகல்கோட்டை,

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி (வயது 34). இவரும், கிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பட்டீல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ, புஜபலியை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு புஜபலியும், அவரது உறவினரான சுமேத் என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த தம்மனகவுடா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் புஜபலியையும், சுமேத்தையும் 4 பேரும் தாக்கினர். அப்போது சுமேத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

புஜபலியை சூழ்ந்து கொண்ட 4 பேரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கத்தியால் புஜபலியை 4 பேரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த புஜபலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் ஜமகண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஜபலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காதல் திருமணம் செய்ததால் புஜபலியை, பாக்யஸ்ரீயின் தந்தை ஆணவ கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜமகண்டி போலீசார் தம்மன்னகவுடாவை கைது செய்து உள்ளனர். அவரது உறவினர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story