மராட்டியம்: பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்


மராட்டியம்:  பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்
x

மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது இல்லத்தில் பா.ஜ.க. தலைவர்களுடன் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.



புனே,



மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், மராட்டிய மேலவை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது.

கட்சி மாறி ஓட்டளித்த சந்தேகம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த 20ந்தேதி இரவில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒன்று திரண்டு அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் புளூ ரேடிசன் என்ற ஆடம்பர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்திலும் கவிழ கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜ.க. நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது.

அக்கட்சியின் முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம். கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

இதற்கேற்ப, சபாநாயகர் நாளை அவையை கூட்டி, வாக்கெடுப்பு நடத்தி, மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அதற்கான நடைமுறைகளை பின்பற்றி நடப்பேன் என்றும் ஷிண்டே இன்று கவுகாத்தியில் கூறியுள்ளார்.

இதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு கோவாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக கோவாவில், தாஜ் ரிசார்ட்டில் அவர்களுக்கு 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன்பின்னர் மும்பை நகருக்கு நாளை புறப்பட்டு செல்லும் அவர்கள் அங்கிருந்தபடியே, மராட்டிய சட்டசபைக்கு நேரடியாக செல்கின்றனர். மக்கள் எங்களுடனேயே உள்ளனர். நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் என ஷிண்டே அணி தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் இன்று மதியம் பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில், மராட்டிய அரசியல் விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

ஒரு வேளை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றால், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்து விட்டு மராட்டியத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூடிய சூழல் காணப்படுகிறது. இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story