வேறொருவருடன் திருமண நிச்சயம்; காதலி உள்பட 11 பேரை கடுமையாக தாக்கிய காதலர்


வேறொருவருடன் திருமண நிச்சயம்; காதலி உள்பட 11 பேரை கடுமையாக தாக்கிய காதலர்
x

ஆந்திர பிரதேசத்தில் வேறொருவருடன் திருமண நிச்சயம் என அறிந்ததும், காதலி உள்பட 11 பேரை காதலர் கடுமையாக தாக்கியுள்ளார்.



குண்டூர்,


ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிராங்கிபுரம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மணமகள் வீட்டார் திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், திடீரென வந்த நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு தடியை கொண்டு அந்த பெண் உள்பட அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் என 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இளம்பெண் மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்து குண்டூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, மற்ற 9 பேர் நரசராவ்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் பேராம் எடுகொண்டலு என தெரிய வந்துள்ளது. தனது காதலை நிராகரித்த ஆத்திரத்தில், இளம்பெண் மற்றும் குடும்பத்தினரை அவர் தாக்கியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story