வேறொருவருடன் திருமணம்: 10 நாட்களில் காதலனுடன் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை


வேறொருவருடன் திருமணம்: 10 நாட்களில் காதலனுடன் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
x

தங்களது காதல் பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவரும் பயத்தில் இருந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கல்லூரி படிக்குபோதே காதலித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் காதலை இருவரும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளனர்.

அதாவது தங்களின் காதல் பற்றி வீட்டில் பேசுவதற்கு பயத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையே லலிதாவுக்கு, அவரது பெற்றோர் வேறொரு நபரை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் திருமணம் கடந்த 4-ந்தேதி நடந்தது. திருமணத்துக்கு பிறகும் லலிதாவும், அப்பண்ணாவும் பேசி வந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லலிதாவும், அப்பண்ணாவும் வீட்டை விட்டு வெளியேறினர்.

கிராமத்தின் வெளிப்பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதற்கிடையே அப்பண்ணாவும், லலிதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story