கேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது - சுகாதார மந்திரி தகவல்


கேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது - சுகாதார மந்திரி தகவல்
x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியபோது அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது.

பல்வேறு காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது. நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் மேலும் சிலருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மாதிரிகள் சேகரிப்பு

சுகாதார நடவடிக்கைகள் மூலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கிடையே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய சுகாதார குழுவினர் ஈடுபட்டனர். அவர்கள் தொற்று பாதித்த பகுதியில் தோட்டங்களில் இருந்த வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்காக அனுப்பி இருந்தனர். அதன்படி மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

வவ்வால்கள் மூலம்...

அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கேரள மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி இருப்பதாகவும், இந்த தகவலை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது" என்றார்.


Next Story