மோடி செங்கோலை ஏந்தினாலும், கொடுங்கோலையே கடைபிடிக்கிறார் - சீதாராம் யெச்சூரி


மோடி செங்கோலை ஏந்தினாலும், கொடுங்கோலையே கடைபிடிக்கிறார் - சீதாராம் யெச்சூரி
x

மோடி செங்கோலை ஏந்தினாலும், கொடுங்கோலையே கடைபிடிக்கிறார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:-

புதிய இந்தியா பிரகடனத்துடன் பலத்த பிரசாரத்துக்கிடையே புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடந்துள்ளது. ஆனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் இல்லாமல் புதிய இந்தியா பிரகடனம் நடந்துள்ளது. இந்தியா என்றால் நாடும், மக்களும். புதிய இந்தியா என்றால் ராஜாவும், பிரஜாவும்.

செங்கோல் என்பது மன்னராட்சி காலத்துடன் தொடர்புடையது. அந்த அடையாளங்களை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு, மதசார்பற்ற ஜனநாயக குடியரசை நிறுவி விட்டனர். ஜனநாயகத்தில் செங்கோலுக்கு இடமில்லை. இங்கு மக்கள்தான் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நியாயமான ஆட்சியை செங்கோல் குறிக்கிறது. அதன் எதிர்ச்சொல்லான கொடுங்கோல், சர்வாதிகாரத்தை குறிக்கிறது. மோடி செங்கோலை ஏந்தினாலும், கொடுங்கோலையே கடைபிடிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story