2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்


2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டன - மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
x

கோப்புப்படம்

2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை 2 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய கல்வி அமைச்சகம், புதிய தேசிய கல்வி கொள்கைக்காக திரட்டிய பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-2021 கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் 15 லட்சத்து 9 ஆயிரம் பள்ளிகள் இருந்தன. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, 14 லட்சத்து 89 ஆயிரமாக குறைந்து விட்டது.

அதாவது, பள்ளிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு மேல் குறைந்துள்ளது. தனியார் பள்ளிகள் மூடப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2020-2021 கல்வி ஆண்டின் தொடக்கத்தில், 97 லட்சத்து 87 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர். அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, அவர்கள் எண்ணிக்கை 95 லட்சத்து 7 ஆயிரமாக குறைந்து விட்டது. அதாவது, 1.95 சதவீத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நாட்டில் 44.85 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதிலும், 34 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பு உள்ளது.

27 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனி கழிப்பறை உள்ளது. அவற்றில் 49 சதவீத பள்ளிகளில் மட்டுமே கைப்பிடியுடன் கூடிய சாய்வுப்பாதை உள்ளது.

கொரோனாவால் மாணவர் சேர்க்கை தள்ளிப்போடப்பட்டதால், நலிந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்வது குறைந்து விட்டது.

குறிப்பாக, 2020-2021 கல்வி ஆண்டில் 19 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story