மும்பை: சிறை கைதிகளுக்கு போதை பொருள் சப்ளை; கான்ஸ்டபிள் கைது


மும்பை:  சிறை கைதிகளுக்கு போதை பொருள் சப்ளை; கான்ஸ்டபிள் கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 8:12 PM GMT (Updated: 8 Oct 2023 8:14 PM GMT)

மராட்டியத்தில் ஆர்தர் சிறையில் கைதிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் ஆர்தர் சாலை சிறையில் கைதிகளுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்படுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், போலீஸ் கான்ஸ்டபிள் விவேக் நாயக் என்பவர் வழக்கம்போல் நேற்று (ஞாயிற்று கிழமை) பணிக்கு வந்துள்ளார்.

அவரிடம் சிறையின் வாசல் பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. எனினும், உள்ளாடையில் சோதனையிட அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மூத்த அதிகாரிகள் முன்னிலையில், சோதனை செய்யப்பட்டதில், உள்ளாடையில் போதை பொருளை அவர் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.

அவர் சிறை கைதிகளுக்கு போதை பொருட்களை சப்ளை செய்தது உறுதியானது. விசாரணையின்போது, ராகுல் என்பவர் கூறியதன் பேரில் ரஷீத் என்ற கைதிக்கு போதை பொருட்களை சப்ளை செய்ய அவர் முயன்றது தெரிய வந்தது. அவரிடம் இருந்து போதை பொருட்கள் அடங்கிய 8 கேப்சூல்கள் கைப்பற்றப்பட்டன.

விவேக் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. மும்பையில் சிறை கைதிகளுக்கு போதை பொருள் வினியோகிப்பில் ஈடுபட்ட கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story