சரண் அடைய கால அவகாசம் கோரிய சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
![சரண் அடைய கால அவகாசம் கோரிய சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு சரண் அடைய கால அவகாசம் கோரிய சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/20/699145-sidhu.webp)
நவ்ஜோத் சிங் சித்துவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய ஓரிரு வாரங்கள் கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988ஆம் ஆண்டு பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்துவின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சித்து சரணடைய ஓரிரு வாரங்கள் கால அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். சில மருத்துவ நிலைமைகளை காரணம் காட்டி தனது கட்சிக்காரருக்கு ஒரு வாரம் அவகாசம் கோரி சித்து தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், இன்று சித்து சரண் அடைவார் என்று தகவல்கள் கூறுகின்றன.