ராமர் கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்: யோகி ஆதித்யநாத் ஆய்வு


ராமர் கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்: யோகி ஆதித்யநாத் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jan 2024 12:33 PM GMT (Updated: 24 Jan 2024 12:37 PM GMT)

இன்று பிற்பகல் வரை சுமார் 3 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று முன்தினம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று லக்னோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள விஐபிக்கள், ஒரு வாரத்திற்கு முன் மாநில அரசு அல்லது ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். தற்போதைக்கு அயோத்திக்கு செல்லும் கூடுதல் சாலைப் பேருந்துகளை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத், பக்தர்களின் தரிசனம் சீராகவும், எளிதாகவும் இருக்க உயர் அதிகாரிகளை நியமித்தார். இன்று பிற்பகல் வரை சுமார் 3 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.


Next Story