டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்


டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
x

டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

பெயர் மாற்றம்

டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை (என்.எம்.எம்.எல்), 'பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்)' என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்து உள்ளது.

இந்த பெயர் மாற்றம் கடந்த 14-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, அருங்காட்சியகத்தின் செயற்குழு துணைத்தலைவர் 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியிருந்தார்.

மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதன் நோக்கம், நேருவின் மரபை மறுப்பதும், அவமதிப்பதுமே என அந்த கட்சி சாடியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

ஒரு சிறந்த நிறுவனம் புதிய பெயர் பெற்று இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

நமது முதல் மற்றும் நீண்ட கால பிரதமரை பார்த்து மோடிக்கு பெரும் அச்சங்கள், சிக்கலான தன்மைகள் மற்றும் பாதுகாப்பின்மைகள் உள்ளன. நேருவையும், நேருவின் மரபினையும் மறுத்தல், திரித்தல், அவதூறு செய்தல் மற்றும் அழித்தல் என்ற ஒற்றை நிகழ்ச்சி நிரலையே அவர் கொண்டிருக்கிறார்.

சிறுபிள்ளைத்தனம்

பிரதமர் மோடி என்.எம்.எம்.எல்-ல் உள்ள 'என்'-ஐ அழித்துவிட்டு அதற்கு பதிலாக 'பி' என்று சேர்த்துள்ளார். அந்த பி என்பது உண்மையில் சிறுபிள்ளைத்தனம் மற்றும் கோபத்தின் வெளிப்பாடு ஆகும்.

ஆனால் சுதந்திர போராட்டத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்பையும், இந்திய அரசின் ஜனநாயக, மதசார்பற்ற, அறிவியல் மற்றும் தாராளவாத அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகளையும் மோடி மற்றும் அவரது பறை அடிப்பவர்களால் அழிக்க முடியாது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

பெயரை நீக்குவது அற்பமானது

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிற பிரதமர்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்த கட்டிடத்தை விரிவுபடுத்தும் யோசனையை நானும் ஏற்கிறேன். உண்மையில், அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ள ஊக்குவிப்பது நல்லது. அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

ஆனால், இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்திய பிரதமர், சுதந்திரத்திற்கு பிறகு முதல் பிரதமராக இருந்தவர், இதுவரை நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரையும் நீக்குவது அற்பமானது. 'நேரு நினைவு பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' என்று நீங்கள் தொடர்ந்து அழைத்திருக்கலாம்.

வரலாறு மீதான கசப்பு

இந்த அற்பத்தனம் துரதிர்ஷ்டவசமானது. இது நமது சொந்த வரலாறு மீதே ஒரு குறிப்பிட்ட கசப்பைக் காட்டுகிறது. நல்ல பெரும்பான்மையைக் கொண்ட இந்த அரசுக்கு இது நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். பெரும்பான்மையுடன் கூடிய அரசிடம் இருந்து பெருந்தன்மையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

இதைப்போல மாணிக்கம் தாகூர் எம்.பி., சுப்ரியா ஸ்ரீநாடே என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய அரசை குறைகூறி வருகின்றனர்.


Next Story