ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம், திறன் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள்: பிரதமர் மோடி


ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம், திறன் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகள்: பிரதமர் மோடி
x

உத்தரகாண்டில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வோர் இளைஞருக்கும் ஆர்வம் மற்றும் திறன்கள் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகளை அரசு வழங்குகிறது என கூறியுள்ளார்.


டேராடூன்,


பிரதமர் மோடி கடந்த ஆண்டு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் நிரப்பும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்படி, நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, உத்தரகாண்டில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி வழியே இன்று நடந்தது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும்போது, கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு, நியமன கடிதங்களை வழங்கி உள்ளது. பா.ஜ.க. அரசு ஆளும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் இதுபோன்ற திட்ட பிரசாரங்கள் நடைபெறும் என கூறினார்.

உத்தரகாண்டில் மத்திய அரசோ அல்லது பா.ஜ.க. அரசோ, ஒவ்வோர் இளைஞருக்கும் அவர்களது ஆர்வம் மற்றும் திறன்கள் அடிப்படையில் முன்னேறி செல்லும் வகையில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவதற்கான முயற்சியை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உத்தரகாண்டில் உட்கட்டமைப்புக்காக நிறைய முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், மக்கள் தொலைதூர இடங்களுக்கு எளிதில் பயணம் செய்ய முடிவதுடன், எண்ணற்ற அளவிலான வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கி தரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story