ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை: மீறினால் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள்!


ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை: மீறினால் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள்!
x

ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் சிறுமிகள் விற்கப்படும் விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்காக, சாதிப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு பஞ்சாயத்துகள் நடத்தப்படும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சொத்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டப்பூர்வமாக்க முத்திரைத் தாள்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு விபச்சார விடுதிகளுக்கு பெண்களை கைமாற்றி விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுமிகளை ஏலம் விடுவதைத் தடுத்தால், அவர்களின் தாய்மார்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள் என்ற நிபந்தனையும் உள்ளது.

அந்த வகையில் ஒரு தாய் ரூ.6 லட்சத்திற்காக தனது மகளை 3 முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுவெளியில் தெரியவர, ஊடகங்களில் இருந்து இதுபோன்ற செய்திகள் வந்ததையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு, என்.எச்.ஆர்.சி., நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பஞ்சாயத்துகள் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதை அறிய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ராஜஸ்தான் காவல்துறை டிஜிபியிடம் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, உண்மை அறிக்கையை 7 நாட்களில் தாக்கல் செய்ய ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையம் இன்று மாநில போலீஸ் டிஜிபி மற்றும் பில்வாரா மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மந்திரி பிரதாப் கச்சாரியாவாஸ் இன்று கூறியதாவது, "இது சம்பவத்தில் உண்மையை கண்டறிய விசாரணை தேவை. இதுபோன்ற தகவல்கள் வெளிவரும் போது, விசாரணை நடக்கும் வரை உண்மையை அறிய முடியாது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் குழந்தைகள் விற்பனை நடப்பதில்லை" என்றார்.


Next Story