மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா நியமனம்


மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா நியமனம்
x

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.



புதுடெல்லி,



மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஏப்ரல் 30ந்தேதி ஜே.பி. மொகபத்ரா ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து, 1986ம் ஆண்டு பணியில் சேர்ந்து, இந்திய வருவாய் துறை அதிகாரியாக பதவி வகித்த சங்கீதா சிங் என்பவருக்கு கூடுதலாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பொறுப்புக்கு நிதின் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்து உள்ளது. இதற்காக கடந்த 25ந்தேதி செயலாளர்கள் மட்டத்திலான குழு ஒன்று கூடி நடத்திய கூட்டத்தில், 1986ம் ஆண்டு பணியில் சேர்ந்த இந்திய வருவாய் துறை அதிகாரியான குப்தா தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான ஒப்புதலை அமைச்சரவையின் நியமன குழு வழங்கியுள்ளது. நிதின் குப்தா தற்போது, சி.பி.டி.டி.யின் உறுப்பினராக உள்ளதுடன் விசாரணை பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 26ல் அவர் நியமிக்கப்பட்டார்.

அதனுடன், 3 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக தனி பொறுப்புடன் கூடிய விசாரணை பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் அதிகாரியாகவும் நிதின் இருந்து வருகிறார். மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆனது, வருமான வரி துறைக்கான கொள்கைகளை வகுக்கிறது.

நாடு முழுவதுமுள்ள அதன் விசாரணை கிளைகளின் அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யும் பணியை சி.பி.டி.டி.யின் அலுவலக உறுப்பினர்கள் (விசாரணை) மேற்கொள்வார்கள்.


Next Story