கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை - குமாரசாமி


கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை - குமாரசாமி
x

வருகிற கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் பிரசாரம் செய்வதால் இங்கு ஒன்றும் நடக்க போவது இல்லை. ஏன் பிரதமர் ேமாடியே கர்நாடகத்திற்கு பிரசாரம் செய்ய வந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க போவது இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.

தொடர் பிரசாரம்

மாநிலத்தில் பிரதமர்நரேந்திர மோடி, அமித்ஷா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை. பா.ஜனதாவினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் இல்லை.மாற்று கட்சிகளில் இருந்து ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு வந்த 20 பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்வோம்.

ஓய்வில்லாமல் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதி்ப்பு ஏற்பட்டது. தற்போது நலமாக உள்ளேன். தொடர்ச்சியாக 10 நாட்கள் ஓய்வில்லாமல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். அதன் பிறகு ஓய்வு எடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story