நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது: மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு


நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது:  மத்திய மந்திரி அமித்ஷா பேச்சு
x

நமது நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும் என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.

இடாநகர்,

அருணாசல பிரதேசத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தந்து உள்ளார். அவர் கிபிதூ நகரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது, 2014-ம் ஆண்டுக்கு முன்பு, வடகிழக்கு பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் கிழக்கை கவனிப்போம் கொள்கையால், வடகிழக்கு பகுதியானது நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் ஒரு பகுதியாகி விட்டது.

இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அவர்களது வீடுகளில் அமைதியாக உறங்க முடியும். ஏனெனில், நமது இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் நமது எல்லை பகுதிகளில் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர்.

கிபிதூ இந்தியாவின் முதல் கிராமம். கடைசி கிராமம் அல்ல. முன்பெல்லாம் மக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்லும்போது, நாட்டின் கடைசி கிராமத்திற்கு சென்று வந்தேன் என கூறுவது வழக்கம்.

ஆனால் நான் இன்று, இந்தியாவின் முதல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளேன் என கூறுவேன் என பேசியுள்ளார். நம்முடைய நிலத்தின் ஊசியளவு பகுதியை கூட யாராலும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது என நாம் இன்று பெருமையாக கூற முடியும்.

ஏனெனில், இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் நமது எல்லை பகுதிகளில் உள்ளனர் என்று மத்திய மந்திரி அமித்ஷா பெருமையாக பேசியுள்ளார்.


Next Story